கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
உளுந்தூர்பேட்டை, வடகுரும்பூர், களமருதூர், குன்னத்தூர், எறையூர், ஆசனூர், சேந்தநாடு, கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை பொதுமக்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர்.
கடுமையான வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை நேரத்தில் வீசிய குளிர்ந்த காற்றும் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.
மேலும், இந்த கனமழையால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்நிலைகள் நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரவிருக்கும் விவசாய பணிகளுக்கு இந்த மழை பெரிதும் பயனளிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment